Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
சிறுகதை
மினி கதை: சந்'தோஷம்'
மினி கதை: வாடகை
பெற்ற மனமும் பிள்ளை மனமும்
- நிர்மல்|ஏப்ரல் 2011|
Share:
அன்று திங்கட்கிழமை. வாரத்தின் முழுப் பளுவையும் தூக்கித் தலையில் வைக்கும் காலை 6 மணி. நான் கண் விழித்ததும் குய் கோர்டன் மற்றும் சக் கட்டிக்கவின் சேனல் 4ல் செய்தியும் வானிலை அறிக்கையும் ஹாலில் இருந்து ஒலித்துக்கொண்டு இருந்தது. ஒரே ஒரு நிமிடம்தான் அது. அப்புறம் என் மனைவி வாணியின் குரல் அல்லது அலறல் இல்லை இல்லை கத்தல் என்றே வைத்து கொள்ளலாம்...கேட்டது.

வேற என்ன, என் 16 வயது மகள் தன்வியிடம் வழக்கம்போல் சண்டை, இல்லை, உரையாடல்தான். தன்வி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவள், இங்கு இருக்கும் பெண்கள் மாதிரி ஆடை அணிவாள். வாணியோ 25 ஆண்டுகள் முன்பு தமிழ் நாட்டில் இருந்த கலாசாரத்தை மனதில் வைத்துக்கொண்டு தினமும் ஒரு மக்கள் அரங்கம் நடத்துவாள்.

பள்ளிக்கோ அலுவலகத்துக்கோ போகும்போது நல்ல சிரித்த தெளிந்த மனநிலையோடு குழந்தைகளை அனுப்பவேண்டும் என்பது என் தாழ்மையான ஆனால் வலுவான கொள்கை. அதனால் நான் அவர்கள் உரையாடலில் தலையிடாமல் காலை வணக்கம் சொல்லிவிட்டு ஒரு கப் காபியை எடுத்துக்கொண்டு என் மகள் உட்கார்ந்து இருந்த டேபிள் எதிரே அமர்ந்து என் இரண்டாவது மனைவியைப் பார்த்து இன்றைக்கு இருக்கும் வேலைகளை அசை போட்டேன். தப்பாக நினைக்காதீர்கள், பிளாக்பெரியைத்தான் இராண்டாவது மனைவி என்கிறேன்.

"தன்வி, இன்று அப்பா நண்பர் பிசினஸ் விஷயமா டெட்ராயிட் வந்திருக்கார். இரண்டே நாள்தான் இங்க இருக்கிறாங்க. அதனால அவரும் அவர் மனைவியும், அவங்க 8 வயசுப் பையனும் டின்னருக்கு வராங்க. நீ பிராக்டிஸ் கிரீக்டிஸ் எதுக்கும் போகாம வீடு வந்து சேரு" என்றாள் வாணி. அவள் நிறுத்தக்கூட இல்லை, "நோ மாம், சாரி, இன்னிக்கு எனக்கு சூஸன் வீட்டுல பிராக்டிஸ் இருக்கு" என்றாள் தன்வி. என் மகள் ஒரு மியூசிக் பேண்டில் கிடார் வாசிக்கிறாள். நான், அவள் எதில் ஆர்வம் காட்டுகிறளோ அதில் போகஸ் செய்ய உதவி செய்ய முயற்சிக்கிறேன். அதே சமயம், அவள் சுயமாகச் சிந்தித்து எது மனதுக்கும், அறிவுக்கும், உலகுக்கும் தேவையான துறையோ, ஆராய்ச்சிப் பணி என்று நினைக்கிறாளோ அதை ஊக்குவிக்கப் பார்க்கிறேன்.

வாணியோ தான் நினைத்தது நடக்கவில்லை என்றல் தாங்கமாட்டாள். அவள்மேல் தப்பு இல்லை. அவள் பெற்றவள்-கனவும் அக்கறையும் அதிகம் பெற்றவள்.

வாணி விடவில்லை, "இதோ பாருடி, உன் சூஸன் முக்கியமா அம்மா முக்கியமா. தினமும் பிராக்டிஸ் அது இதுன்னு சொல்லி உன் இஷ்டப்படி விட்டுர்றாரு இந்த மனுஷன். அம்மா ஒருநாள் சொன்னா கேக்கமாட்டியா?". தன்வி - "அம்மா ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. இந்த வார ப்ரோக்ராமுக்குக் கஷ்டமான கம்போசிஷன் டெய்லி பயிற்சி பண்ணினாத்தான், ஃப்ரைடே மேடைல வொர்க் அவுட் ஆகும். ஐ லவ் யு கய்ஸ். ஆனா இன்னக்கு மட்டும் முடியாதுமா. ப்ளீஸ்." அவள் குரலில் உண்மை இருந்தது. வாணியின் முகத்தில் அப்படி ஒரு ஏமாற்றம்.

வாணி கைப்பையையும் செல்லையும் எடுத்துக்கொண்டு "சி யு டு நைட்" என்று சொல்லி முடிப்பதுற்குள் பறந்தாள் அலுவலகத்துக்கு. தன்வி, "அப்பா, அம்மாவிடம் சொல்லி சமாதானம் பண்ணுங்க, நான் எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ, வரப் பார்க்கிறேன். அப்புறம், இன்று பிராக்டிஸ் சூஸன் வீட்டில் இல்லை. அவள் நண்பன் ஒரு ஹால் மாதிரி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கோடௌனில் வாத்தியங்களை செட் செய்து வைதிருக்கான், அப்பத்தான் ஒரு மேடை போல் இருக்கும் .வாத்தியங்களின் ரியல் சவுண்ட் அப்பத்தான் தெரியும். You know about acoustics." என் எலக்ட்ரானிக்ஸ் மோகத்தைச் சொல்லிக் காண்பித்தாள். "எனக்குப் புரியுது. எங்க போனாலும் எனக்கோ உன் அம்மாவுக்கோ போன் பண்ணி சொல்லிடு. ஏழரைக்குள்ள வரப் பாரு. அப்ப வந்தாலும் யு கேன் மீட் மை பிரண்ட்ஸ்" என்றேன். "கண்டிப்பா டாடி நீங்க சோ ஸ்வீட். ஐ லவ் யு. பை". பறந்தாள் தன்வி பஸ் பிடிக்க.

அன்று அலுவலக நேரம் முழுவதும் என் மூளையில் காலை நிகழ்வுகள் ஓடிக்கொண்டே இருந்தன.

மாலை 5 மணிக்குக் கிளம்பி வரும் வழியில் சில பழங்கள், ஜூஸ் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, பிறகு வீட்டில் வாணிக்குச் சில உதவிகள் செய்தேன். வாணி வேலையில் மும்முரமாக இருந்ததால் தன்வியைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. எனக்குத்தான் ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் தன்வி எனக்கு போன் பண்ணி அவள் பிராக்டிஸ் செய்யும் இடம் எங்கிருக்கிறது என்று சொல்லியிருந்தாள். என் நண்பரும் குடும்பமும் 6 மணி அளவில் வந்தார்கள். எல்லோரும் பலகாரம் சாப்பிட்டபடியே பால்ய கதையில் இருந்து அமெரிக்கக் கதைவரை பேசித் தீர்த்தோம். என்கூட அஞ்சாவதிலிருந்து பன்னிரண்டாவது வரை படித்த நண்பன் ஆச்சே.

"8:30 மணிக்கு நான் சூஸன் வீட்டுக்கு போன் செய்தேன். சூஸன் அப்பாவும் போன் செய்து பார்த்தார் ஆனால் சூஸன் போனை வீட்டில் வைத்துவிட்டுப் போய் இருக்காள் என்றார். எனக்கு எரிச்சல் வந்தது. இதற்காகவா செல்போன் வாங்கித் தருகிறோம்!"
8 மணிக்குச் சாப்பிட ஆரம்பித்தோம். தன்வி இன்னும் வரவில்லை. வாணி முதல்முறையாகக் கேட்டாள், "என்னங்க, நம்ம பொண்ணுகிட்ட இருந்து போன் எதாவுது வந்துதா". நான் "இல்லை, கொஞ்ச நேரத்தில் நான் பண்ணிப் பார்க்கிறேன்" என்றேன். ஆனால் நான் ஏற்கனவே இரண்டுமுறை அவள் செல்லுக்குப் பண்ணியும் அவள் எடுக்காததை வாணியிடம் சொல்லவில்லை.

8:30 மணிக்கு நான் சூஸன் வீட்டுக்கு போன் செய்தேன். சூஸன் அப்பாவும் போன் செய்து பார்த்தார் ஆனால் சூஸன் போனை வீட்டில் வைத்துவிட்டுப் போய் இருக்காள் என்றார். எனக்கு எரிச்சல் வந்தது. இதற்காகவா செல்போன் வாங்கித் தருகிறோம்! வாணியும், என் நண்பர் இருந்தததால் படபடப்பை வெளிய காண்பிக்காமல் இருந்தாள். சூஸனின் பெற்றோரும் வருத்தப்பட ஆரம்பித்தார்கள்.

9 மணி. என் நண்பரும் அவர் மனைவி பிள்ளை எல்லோரும் தன்வியைப் பற்றிக் கேட்டபோது, "அவள் நண்பி வீட்டிலயே டின்னர் முடிச்சு ஹோம்வர்க் செய்துவிட்டு அங்கயே தங்கப் போகிறாள்" என்று மனதை கல்லாக்கிக் கொண்டு சொல்லி முடித்தோம். அவர்களும் நேரம் ஆனதால் கிளம்பினார்கள்.

9:30 மணி. வாணி முகம் சுருண்டு போய், கண்களில் ஈரம்படியத் தொடங்கியது. எனக்கு அடிவயிற்றில் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது. இருவரும் காரில் ஏறி சூஸன் வீட்டுக்குப் போனோம். அவர்கள் வீடு எங்கள் வீட்டிலிருந்து 20 நிமிடம்தான். அங்கு சென்றவுடன் அவர்கள் முகத்தில் இருந்த கவலையைப் பார்த்ததும் வாணிக்கு வியர்க்க ஆரம்பித்தது. அவளுக்கு ஏற்கனவே பிளட் பிரஷர். எனக்குக் கவலையாக இருந்து. சூஸன், தன்வி, ஜார்ஜ் மூவர்தான் போனார்கள். இரு பெண்களிடமும் பேச முடியவில்லை. தன்வி போன் போக மாட்டேன்கிறது, சூஸன் போன் எடுத்துட்டு போகவில்லை. சூஸன் அப்பா அவள் போனை ஆராய்ந்து, ஜார்ஜ் நம்பரை எடுத்து, அவனுக்கு போன் செய்தார். ஜார்ஜ், "அங்கிள் வி ஆர் ஆன் தி வே இன் எ காப் கார். ஐ வில் டெல் யு தி டிடெய்ல்ஸ் இன் பெர்சன்" என்றான். போலீஸ் வண்டி என்று கேட்ட உடனே, வாணி மயங்கி விழுந்தாள்.

இது முன்னே நடந்தது - 5 மணிக்கு. தன்வி, "சூஸன் இன்றைக்கு மூணுபேர் மட்டும்தானா? மற்ற 2 பேரும் வர மாட்டாங்கன்னு தெரிஞ்சிருந்தால், இன்றைக்கு பிரச்டிஸை கேன்சல் பண்ணியிருக்கலாம்" என்று கடிந்து கொண்டாள். அவர்கள் இசைக் குழுவில் 5 பேர். சூஸன் மற்றும் பீட்டர் பாடகர்கள். தன்வி கிடார், ஜார்ஜ் கீ-போர்டு. ஜேக் டிரம்ஸ். ஜேக்கும் பீட்டரும் இன்றைக்கு வரவில்லை.

மூவரும் காரில் ஏறி கோடௌனுக்கு வந்தவுடனே, தன்வி "சூஸன் என் செல் பாட்டரி தீர்ந்துவிட்டது, உன் போனை யூஸ் பண்ணி என் பேரன்ட்ஸிடம் பேசணும், நாம் கிளம்பறதுக்கு முன்னே, ஓகே?" என்றாள். சரி என்றாள் சூஸன், போன் தன் கைப்பையில் இருப்பதாக எண்ணிக்கொண்டு.

இதுவும் முன்னே நடந்தது - 7:30 மணிக்கு. பிராக்டிஸ் முடிந்ததும், மூவரும் ஜார்ஜின் காரில் ஏறிக் கிளம்பினார்கள். கார் நெடுஞ்சாலை வந்ததும், தன்வி செல்லை கேட்டவுடன், சூஸன் கைப்பையில் தொளாவிப் பார்த்தால், போன் இல்லை! "ஐ அம் சாரி தன்வி, போனை வீட்டில் விட்டுட்டு வந்துட்டேன் போல". தன்வி அவளை முறைத்தாள். ஜார்ஜிடம் போன் கேட்க நினைக்கும் போதே கார் ஒரு மக்கர் சத்தம் கொடுத்துக் கொண்டே மெதுவாக ஓரம் போய் நின்றது. எல்லோர் முகத்திலும் கேள்விக்குறி. ஜார்ஜ் இறங்கிப் பார்த்தான். அவனுக்குத் தெரிந்த வித்தையெல்லாம் காண்பித்தான். ஒரு பலனும் இல்லை.

மணி 8:30 ஆகிவிட்டது. தன்விக்குக் கோபமும் வருத்தமுமாக இருந்தால். ஜார்ஜ் AAAவுக்கு போன் செய்து இருந்தான். அவர்கள் வருவதற்கு எல்லோரும் காத்திருந்தார்கள். ஜார்ஜ் போனில் ஒரே ஒரு கோடுதான் சார்ஜ் இருந்தது. கார் பாட்டரியும் வறண்டு போச்சு. அதனால் காரில் சார்ஜ் செய்யவும் முடியாது. தன்விக்கு அப்பா அம்மாவை நினைத்துக் கவலை அதிகமானது. சூஸனும் ஜார்ஜும் அதிகம் கவலைப்பட்ட மாதிரித் தெரியவில்லை.

9:15 மணிக்கு இவர்கள் மூவரும் நிற்பதைப் பார்த்து ஒரு காப் வண்டி ஒதுங்கியது. ஜார்ஜ் எல்லாவற்றையும் சொன்னவுடன், காப் அவர்களை வீட்டில் இறக்கி விடுவதாகக் கூறினார். AAAவுக்கு போன் செய்து வண்டியை ஜார்ஜ் வீட்டிற்கு அனுப்புமாறு சொல்லிவிட்டு எல்லோரும் காரில் ஏறினார்கள். அப்போது மணி 9:30. சூஸனின் அப்பா ஜார்ஜுக்கு போன் செய்தார்.

*****
நானும் வாணியும் ரொம்பக் கவலைப்படுவோம் என்று முதலில் எங்கள் வீட்டுக்குக் காப் வண்டி வந்தது. அவள் வீட்டிற்கு வரும்போது, மணி 10. தன் வீட்டுக்கு முன்னேயிருந்து ஒரு ஆம்புலன்ஸ் கிளம்புவதைப் பார்த்துத் தன்வி பதற்றம் ஆனாள். சூஸன் தன்வியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். ஆம்புலன்ஸில் இருந்த ஒருவர், ஒன்றும் இல்லை சின்ன மயக்கம்தான் நதிங் டு வொர்ரி என்றவுடன், காப் சூஸனையும், ஜார்ஜையும் அழைத்துப் போகத் தயாரானார். தன்வி வீட்டுக்குள் நுழைந்தாள்.

வாணி லேசாகக் கண்களை திறந்திருந்தாள். கண்கள் அழுது சோர்வடைந்து இருந்தன. நான் தன்வியைப் பார்த்தவுடன் கட்டித் தழுவினேன். "கடவுளுக்கு நன்றி, நீ பத்திரமாக திரும்பி வந்ததற்கு" என்றேன். தன்வி கண்களில் கண்ணீர். "அப்பா ஐ ம சாரி. போன் பாட்டரி தீர்ந்துவிட்டது. சூஸன் போன் கொண்டு வரவில்லை. கார் பிரேக் டௌன் ஆனது" என்று எல்லாவற்றையும் படபடவென்று சொல்லி முடித்தாள். வாணி படுத்தவாறே கேட்டுக்கொண்டு இருந்தாள். நான் தன்வியிடம் "எனக்குப் புரியுதும்மா. ஆனா நங்க ரொம்ப பயந்துட்டோம். இதுமாதிரி இனி நடக்கக் கூடாது."

தன்வி அம்மாவின் பக்கதில் அமர்ந்து அவள் கைகளைப் பற்றினாள். "அம்மா ஆர் யு ஓகே? ஐ ஆம் வெரி சாரி." வாணி அழுதபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டாள். வாணியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வாயைத் திறந்தால், பிள்ளையைத் திட்டிவிடுவோமோ என்ற பயத்தில் திரும்பிக்கொண்டாள் - முகத்தையும், மனதையும்.

நான் மெதுவாகத் தன்வியிடம் "அம்மா ஓய்வு எடுக்கட்டும். டிரஸ் மாற்றிவிட்டு வா. எதாவது சாப்பிடு. அப்பா சூடு பண்ணி வைக்கிறேன்" என்றேன். தன்வி யோசனையுடன் வெளி நடந்தாள். நான் சாப்பாடு எடுத்து வைத்தவுடன், தன்வி வந்து அமர்ந்துகொண்டே கேட்டாள், "அப்பா, எனக்குத் தெரியும் இன்னைக்கு நடந்தது பெரிய தப்புதான். ஆனால் நான் வேணும் என்று செய்யவில்லை. மிகவும் வருத்தப்பட்டேன். நீங்கள் எவ்வுளவு பொறுமையாய் இருக்குறீங்க. அம்மா ஏன் இப்படி ஸ்ட்ரெஸ் ஆகி, ஆம்புலன்ஸ் எல்லாம் வரவச்சி, என்னைப் பார்த்து பேசக்கூட இல்லை. அம்மா எப்பவுமே இப்படித் தான். நீங்கதான் புரிஞ்சி நடக்கிற பேரண்ட். எனக்கு உங்க அப்ரோச்தான் பிடிச்சிருக்கு. அம்மா எதுக்கெடுத்தாலும் இப்படி டிராமா பண்றாங்க" என்று கொட்டி வருத்தப்பட்டாள். கொஞ்சம் நியாயமான வருத்தம்தான்.

அவளுக்கு சட்னி எடுத்து வச்சிகிட்டே நான் சொன்னேன் "தன்வி, எனக்குப் புரியுது. ஆனால் அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் நீ பாதுகாப்பா ஹெல்த்தியா வளருனும்னுதான் ஆசை. அவள் கொஞ்சம் உணர்ச்சி அதிகம் காட்டுவா. பத்து மாசம் உன்னை சுமந்ததாலோ என்னமோ, என்னைவிட பத்து மடங்கு அதிகம் யோசிப்பா. நமக்கு இரண்டு கண்கள் இருக்கு, ஆனா நீ நோட் பண்ணி இருக்கியா, அடிக்கடி ஒரு கண்ணுமட்டும் உறுத்தும். நாம கசக்குவோம். அது இன்னும் உறுத்தும். அப்புறம் சிவப்பா மாறிடும். ஆனா ரெண்டு கண்ணுலேயும் ஒரே பார்வைதானே? அதேமாதிரிதான், உன் அம்மா ரொம்ப கலங்குவா, வருத்தப்படுவா. அவளையே கஷ்டப் படுத்திக்குவா. அடுத்தவங்க அவளைப் பத்தி என்ன நினைக்கிறாங்க என்றெல்லாம் யோசிக்க மாட்டா. ஆனா எங்க ரெண்டு பேருக்கும் எப்போவும் ஒரே நோக்குதான் - அது உன்னோட நலன்."

தன்வி சாப்பாட்டை நிறுத்திட்டா. சாப்பாட்டைவிட அவள் சிந்தனைக் குதிரையை நிறுத்திவிட்டு யோசித்தாள் ஒரு நிமிடம். பிறகு எதுவும் பேசவில்லை, இருவரும். அமைதிக்கு இருக்கிற வலுவான புரிதலும், அறிதலும், எந்த வார்த்தைக்கும் இல்லை.

காலை விடிந்தது. தன்வி இறங்கி வந்தாள். அம்மாவை இறுகக் கட்டி அணைத்து முத்தமிட்டு காலை வணக்கம் சொன்னாள். அவள் இறுக்கத்தில் ஒரு வித்தியாசம். கடவுள் சந்நிதியில் நாம் நம்மை மறந்து சமர்ப்பிப்போமே, அந்த சரணாகதி நிலை தெரிந்தது. என்னையும் பார்த்துக் காலை வணக்கம் சொன்னாள். அவள் கவனம் முழுவதும் தன் தாயின்மீது இருந்தது.

வாணிக்கு லேசாகப் புரிந்தது. எனக்குத் தன்வியின் அன்பு, பாசம், வெளிப்படையாக என் மனைவிமீது படர்வதற்கு நேற்றைய நிகழ்ச்சி காரணமாக அமைந்ததை எண்ணிக் கடவுளுக்கு நன்றி சொன்னேன். பிள்ளையின் அன்பை உணர்வதைவிட உயர்ந்த சொத்து இந்த உலகில் உண்டா?

நிர்மல்
More

மினி கதை: சந்'தோஷம்'
மினி கதை: வாடகை
Share: 




© Copyright 2020 Tamilonline